பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 19 :
போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனைச் சந்தித்து, ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) இணைப்புத் திட்டம் மற்றும் மலேசியா – சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட பிற போக்குவரத்து விஷயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளார்.
அதற்கு முன்னர் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 19) காலை ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தரை டாக்டர் வீ சந்தித்தார்.
“மலேசியா மற்றும் சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட RTS இணைப்பு மற்றும் பிற போக்குவரத்து விஷயங்களைப் பற்றி விவாதிக்க சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுடனான எனது சந்திப்பிற்கு முன்னதாக, அந்த சந்திப்பில் “ஜோகூர் பாரு-சிங்கப்பூர் RTS இணைப்புத் திட்டம் பற்றி, குறிப்பாக அத்திட்டத்துடன் தொடர்புடைய சிங்கப்பூரின் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) பைப்லைனை இடமாற்றம் செய்வது குறித்து, மாண்புமிகு சுல்தானுக்கு விளக்கமளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தினேன். நான் இன்று (செப்.19) பிற்பகல் காஸ்வேயைக் கடக்கிறேன்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) இணைப்புத் திட்டம், டிசம்பர் 31, 2026 முதல் ஜனவரி 1, 2027க்குள் முடிவடையும் பாதையில் உள்ளது, என்றார்.
இதன் மூலம் ஒவ்வொரு வழித்தடத்திலும் ஒரு மணி நேரத்திற்கு 10,000 பயணிகள் பயணம் செய்யும் திறன் கொண்ட இந்த RTS இணைப்பு ஜோகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் இடையே வெறும் ஐந்து நிமிடங்களில் எளிதான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.