சபாக் பெர்னாம், செப்டம்பர் 20 :
இங்குள்ள ஜலான் ஹாஜி சுலைமான், பத்து 38 பரோவில் உள்ள அவர்களது வீடு, நேற்று இரவு தீப்பிடித்து எரிந்ததையடுத்து, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மூன்று பேர் கொண்ட குடும்பம் பாதுகாப்பாக வெளியேறினர்.
இரவு 8.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட இரண்டு மாடிக் குடியிருப்பின் 80 விழுக்காடு தீயில் அழிந்தது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், இரவு 8.49 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, சபாக் பெர்னாம் மற்றும் சுங்கை பெசார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து இயந்திரங்களுடன் 18 பேர் கொண்ட குழு அந்த இடத்திற்கு விரைந்தது.
“சம்பவத்தின் போது, வீட்டில் 24 வயது பெண், ஆறு வயது சிறுவன் மற்றும் நான்கு வயது சிறுமி என மூன்று பேர் இருந்தனர்.
“குறித்த மூவரும் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, தீ பிரதான அறையில் எரியத்தொடங்கியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
தீயை அணைக்கும் பணிக்கு சுமார் 10 நிமிடங்கள் எடுத்ததாக நோராஸாம் கூறினார்.
“இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
“தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் இரவு 9.08 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.