தும்பாட்டில் கடத்தப்பட்ட மலேசியப் பெண் பாதுகாப்பாக மீட்பு

கோலாலம்பூர், செப்.30 :

கடந்த செப்.13 அன்று கிளாந்தானின், தும்பாட்டில் உள்ள அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு முகவரான பெண்மணி பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார், என்று போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரை மீட்பதற்கான முயற்சிகளில் உதவிய ரோயல் தாய் காவல்துறையினருக்கும், தாய்லாந்து நாட்டுத் தூதரகத்திற்கும், அந்நாட்டில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கும் ரோயல் மலேசியன் காவல்துறை நன்றி தெரிவித்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கின் விசாரணையின் அடிப்படையில் இதுவரை கிளாந்தான், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த ஏழு உள்ளூர் ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்றும், இவ்வழக்கு கடத்தல் சட்டம் 1961 இன் பிரிவு 3(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 13 சம்பவத்தின் போது, ​​36 வயதுடைய பெண் ஒருவரை மாலை 5.10 மணியளவில் கம்போங் செமாட் ஜால், தும்பாட்டில் உள்ள அவரது வீட்டிலிருந்து பல ஆண்களால் கடத்திச் செல்லப்பட்டார்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர் தும்பாட், கோலா ஜம்புவில் உள்ள சட்டவிரோத படகுத்துறை மூலம் தாய்லாந்திற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here