ஜோகூர் பாரு, செப்.30 :
சமூக ஊடகமான டிக்டோக்கில் (TikTok) ரோயல் மலேசியன் காவல்துறையை அவமதித்ததற்காக, ஆடவர் ஒருவர் நேற்று பெர்மாஸ் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
தென் ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறுகையில், 5 மணியளவில் தமது காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுப் பிரிவுக்கு அந்த வீடியோ தொடர்பில் தகவல் கிடைத்தது.
சம்பந்தப்பட்ட வீடியோவின் தலைப்பு ஒட்டுமொத்த காவல்துறையையும் நேரடியாக அவமதிப்பதாக உள்ளது எனேவ அவர் கூறினார்.
“தகவல்களின் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு வைரலான டிக்டோக் வீடியோவின் உரிமையாளரைக் கண்டுபிடித்து அந்த நபரைக் கைது செய்தது.
மேலும் டிக்டோக் செயலியில் வீடியோவை பதிவேற்ற சந்தேக நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் கைத்தொலைபேசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
“சந்தேக நபர் மற்ற டிக்டோக் பயனர்களின் புகழ் மற்றும் அவர்களின் கவனத்தை பெறுவதற்காக அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.