கோத்தா கினாபாலு, செப்.30 :
இந்த வார தொடக்கத்தில், சபாவின் இனானாமிலுள்ள ஒரு பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து நான்காம் படிவ மாணவிக்கு இனிப்பு வழங்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த திங்கள் (செப். 26) மற்றும் செவ்வாய் (செப். 27) ஆகிய இரு நாட்களும் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் மீது பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.
முதல் நாள் (திங்கள்கிழமை) பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த சந்தேக நபர், அங்கிருந்த பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்தார், பின்னர் குறித்த மாணவிக்கு இனிப்பு வழங்க முயன்றார். அனால் அந்த மாணவி அவரை தனக்கு தெரியாது என்று கூறி, இனிப்புகளை ஏற்க மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் சந்தேக நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார்.
மறுநாள், பள்ளியின் படிக்கட்டுக்கு அருகில் சந்தேகத்திற்குரிய நபர் நிற்பதை ஒரு மாணவர் பார்த்து, உடனடியாக எச்சரிக்கையை எழுப்பினார்.
உடனே சந்தேக நபர் ஆண்கள் கழிவறையை நோக்கி ஓடி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
கோத்தா கினாபாலு நகர காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜைதி அப்துல்லா கூறுகையில், சந்தேக நபரை போலீசார் இன்னும் அடையாளம் காணவில்லை என்றும் போலீஸ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்லதாவும் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 447 வது பிரிவின் கீழ் குற்றவியல் அத்துமீறலுக்காக விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.