ஜோகூர் பாரு, அக்டோபர் 6 :
ஜோகூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 22 பேராக இருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 29 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு (JPBD) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 குடும்பங்களைச் சேர்ந்த 19 பாதிக்கப்பட்டவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு பொந்தியானில் திறக்கப்பட்ட செக்கோலா கேபாங்சான் (SK) ஸ்ரீ ஆனோம் வெள்ள நிவாரண மையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் கம்போங் பாரிட் ஹாஜி முகமட் சாங்லாங்கில் வசிப்பவர்களாவர்.
“இதற்கிடையில், கம்போங் சுங்கை லினாவ்வைச் சேர்ந்த 10 பேர் கொண்ட இரண்டு குடும்பங்கள் இன்னும் குளுவாங்கில் உள்ள SK சுங்கை லினாவ் நிவாரண மையத்தில் உள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால், மாநிலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.







