கோத்தா கினாபாலு, அக்டோபர் 14 :
தாவாவில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இன்று வெள்ளிக்கிழமை (அக். 14) ஏற்பட்ட தீ விபத்தில், அருகிலிருந்த 5 வளாகங்கள் எரிந்து நாசமானது.
எனினும், இவ்விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அங்குள்ள ஹாப் செங், ஜாலான் தஞ்சோங் பத்துவில் நடந்த சம்பவம் குறித்து, பிற்பகல் 1.54 மணிக்கு தீயணைப்பு துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் 300×100 அடி அளவுள்ள பல வளாகக் கிடங்குகள் தீயினால் 70 விழுக்காடு சேதமடைந்ததை கண்டனர். அங்கு எட்டு வளாகங்கள் இருந்தன, அதில் ஐந்து தீப்பிடித்தது, மூன்று வளாகங்களை தீயிலிருந்து காப்பாற்ற முடிந்தது என்றார்.
“அவ்வளாகங்களிலிருந்து 10 லோரிகள் மற்றும் ஒரு வாகனத்தை தீயிலிருந்து அகற்றினர்,” என்று தீயணைப்பு துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
நண்பகல் 2.20 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மாலை 3.57 மணிக்கு நடவடிக்கை முடிவுக்கு வந்தது என்று அவர் மேலும் கூறினார்.