மோசடிக் கும்பலில் சிக்கி மூதாட்டி RM400,000க்கும் அதிகமான சேமிப்பை இழந்தார்

பத்து பகாட், அக்டோபர் 22 :

பேராக் மாவட்டத் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவரால் ஏமாற்றப்பட்டதால், 73 வயது மூதாட்டி ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பில் இருந்து RM400,000-க்கும் அதிகமான பணத்தை இழந்தார்.

பாதிக்கப்பட்டவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தேக நபரிடமிருந்து அழைப்பு வந்தது, அவர் தன்னை “சர்ஜன் ஓங்” என்று அறிமுகப்படுத்தினார். பின்னர் “சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், அவர் வங்கிக்கு செலுத்த வேண்டிய பணம் நிலுவையுள்ளதாக கூறினார், பின்னர் தான் ஒரு ‘டத்தோஸ்ரீ’ என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபருக்கு அழைப்பை மாற்றினார் என்று பத்து பகாட் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.

“அந்த டத்தோஸ்ரீ பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தார், மேலும் பாதிக்கப்பட்டவரின் வழக்கைத் தீர்ப்பதற்கு தனது உதவி புரிவதாக கூறினார்” என்று ஏசிபி இஸ்மாயில் இன்று சனிக்கிழமை (அக் 22) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவர் வங்கிக் கணக்கில் சிறிது பணத்தை மாற்றினால் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று சந்தேக நபர் கூறினார்.

தம்மை போலீஸ் என நம்பவைத்த குறித்த மோசடிக் கும்பலுக்கு, மூதாட்டி நான்கு பரிவர்த்தனைகள் மூலம் அக்டோபர் 20ஆம் தேதி மொத்தம் RM426,450 பணப்பரிமாற்றம் செய்தார்.

“அவள் ஏமாற்றப்பட்டதாக அவளது நண்பர்கள் சிலர் கூறியதையடுத்து, அப்பெண்மணி அதே நாளில் போலீசில் புகார் செய்தார்,” என்று அவர் கூறினார்.

மோசடி செய்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் ஆகியவற்றை வழங்குகிறது.

குறிப்பாக, அமலாக்க அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால், அந்த மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் நினைவூட்டினார்.

மேலும் தகவல்களை உறுதிப்படுத்த பொதுமக்கள் எப்போதும் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகலாம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here