புத்ராஜெயா, அக்டோபர் 22 :
15வது பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள்தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வாக்களிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, நவம்பர் 17 முதல் ஐந்து நாள் விடுமுறை அளிக்க உயர்கல்வி அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பான சுற்றறிக்கை இன்று சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, உயர்கல்வி இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டத்தோ டாக்டர் ஹுசைனி ஓமர் இதை உறுதிப்படுத்தினார்.
பாலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரிக் கல்வித் துறை உட்பட அனைத்து பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த கடிதம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றார்.
அக்டோபர் 21 தேதியிட்ட கடிதத்தின்படி, “நவம்பர் 17 முதல் 21 வரை ஐந்து நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாகவும் மாணவர்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று திரும்புவதற்கு இது போதுமான நேரத்தை வழங்கும்” என எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் காலப்பகுதியில் அனைத்து வகுப்புகள் மற்றும் மாணவர்களின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு வேறு தேதியில் நடத்தப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








