அலோர் ஸ்டார், அக்டோபர் 24 :
நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக் 23) பிற்பகல் 3 மணியளவில், 500 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு கோலக் கெடாவிலிருந்து லங்காவிக்கு சென்று கொண்டிருந்தபோது, நீரோட்டத்தில் சிக்கித் தவித்த பயணிகள் படகு, கோலக் கெடா படகுத்துறைக்கு பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்பட்டது.
கோலக் கெடாவில் உள்ள சரக்கு நிறுவனத்திற்கு சொந்தமான இழுவை படகு மூலம் இரவு 9.25 மணியளவில் படகு இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் மலேசிய கடல்சார் அமலாக்க துறையின் கோலக் கெடா கடல்சார் மண்டல இயக்குநர் கொமாண்டர் (கடல்) நூர் அஸ்ரேயாண்டி இஷாக் தெரிவித்தார்.
அப்படகில் பயணம் செய்தவர்களில் ஒருவருக்கு நரம்புக் கோளாறு இருந்ததாகவும், இருவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும், அம்மூவரும் மேலதிக கண்காணிப்பிற்காக இங்குள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று நேற்றிரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.