கோலாலம்பூர், அக்டோபர் 27 :
15வது பொதுத் தேர்தலை (GE15) சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, புதிதாக குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுவது இனங்காணப்பட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது பாரிசான் நேஷனல் (BN) ஆதரவாளர்களுக்கு RM500 e-wallet உதவி கிடைப்பதாக குறுஞ்செய்தி அனுப்பி, அதிலுள்ள இணைப்பைப் பயன்படுத்தி அடையாளச் சரிபார்ப்பை மேற்கொள்ளும்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்கப்படுவார்கள் என்று, செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் பெஹ் எங் லாய் கூறினார்.
குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் இணைப்பு அதிகாரப்பூர்வமான TNG இணைப்பு அல்ல. அந்த குறுஞ்செய்தியில் “TNG இணைப்பு என அனுப்பட்டிருக்கும் இணைப்பு touchngoemy.top என்றுள்ளது, இது உண்மையான இணைப்பு அல்ல என்பதை ‘emy.top’ என்ற இறுதி எழுத்துக்கள் இது தெளிவாக ஒரு மோசடி எனக் காட்டுகிறது.
பொதுமக்கள் இந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம். சரியான இணைப்பில் ’emy.top’ என்ற எழுத்துக்கள் இருக்கக்கூடாது, அவ்வாறு emy.top இருந்தால், இது நிச்சயமாக ஒரு மோசடிக் கும்பல் நடத்தும் ஆன்லைன் ‘ஸ்கேம்’,” என்று அவர் கூறினார்.
TNG பயனர்களுக்கு எந்த செய்தியையும் அறிவிப்பையும் அனுப்பாது என்றும் இதுபோன்ற செயல் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்றும் பெஹ் கூறினார்.
முன்னதாக, TNG இணைப்பு வழியாக ஒரு அறிவிப்பைப் பெற்றவுடன், பாதிக்கப்பட்டவர் இணைப்பை அணுகிய பிறகு, தான் RM1,950 ஐ இழந்ததாக ஒரு நபர் கூறியாது சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.