அலோர் ஸ்டார், நவம்பர் 4 :
நேற்று பிற்பகல் மலேசியா-தாய்லாந்து எல்லையில், சட்டவிரோத பாதையில் நாட்டிற்குள் நுழைய முயன்ற 30 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய ஆயுதப்படையினர் கைது செய்தனர்.
புக்கிட் காயு ஈத்தமிலுள்ள மலேசிய காலாட்படையின் ஆறாவது படைப்பிரிவின் பொறுப்பிலுள்ள பகுதியில், Op Benteng எனும் குறியீட்டு பெயருடன் நடந்த சோதனையின் கீழ் மியான்மரை சேர்ந்த அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டதாக மலேசிய காலாட்படையின் (2 பிரிவு) தலைமையகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பிற்பகல் 3.30 மணியளவில், மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரோந்து உறுப்பினர்கள் குழுவினர், இரப்பர் தோட்டப் புதருக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைந்திருந்த பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து, அனைவரையும் கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 27 தொலைபேசிகள், மலேசியா, மியான்மர், தாய்லாந்து நாட்டுப் பணம், 24 மியான்மர் தேசிய அடையாள அட்டைகள், சூட்கேஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் மேல் நடவடிக்கைக்காக புக்கிட் காயு ஈத்தாம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.









