அரையாண்டில் 43.62 பில்லியன் ரிங்கிட் வசூல் செய்து மலேசிய சுங்கத்துறை சாதனை!

புத்ராஜெயா:

அரச மலேசிய சுங்க இலாகா (JKDM) நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டில் 43.62 பில்லியன் ரிங்கிட் வருவாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் வசூலான 35.69 பில்லியன் ரிங்கிட்டை விட 22.22 சதவீதம் அல்லது 7.93 பில்லியன் ரிங்கிட் கூடுதலாகும் என சுங்க இலாகா தலைமை இயக்குநர் டத்தோ அம்ரான் அகமட் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், நிதி அமைச்சு நிர்ணயித்த 40 பில்லியன் ரிங்கிட் தொடக்க இலக்கை விட 3.62 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ள நிலையில், ஆண்டின் முழு இலக்கான 80 பில்லியன் ரிங்கிட்டை எட்டுவதற்குத் தொடர் உத்திகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

மேலும், அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் 1.30 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3,609 கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் போதைப்பொருள், சட்டவிரோதச் சிகரெட், வாகனங்கள் மற்றும் மதுபானக் கடத்தல்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் சுங்க இலாகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here