மலாக்கா, நவம்பர் 10 :
அம்மோனியா வாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று இங்குள்ள லுபோக் சீனா, அலோர் காஜாவில் உள்ள ஜாலான் உத்தாமா, கம்போங் சுங்கை திமூன் என்ற இடத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதில் அவற்றில் 6 தோம்புகளில் வாயுக் கசிவு ஏற்பட்டது என்று மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மண்டலம் 1 அதிகாரி, சுல்கைராணி ரம்லி தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு துறைக்கு காலை 9.47 மணிக்கு அவசர அழைப்பு வந்தது, அதனைத்தொடர்ந்து மஸ்ஜிட் தானா மற்றும் அலோர் காஜா தீயணைப்பு நிலையங்களில் இருந்து 17 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
“வாயுக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அது காற்று மாசுபாட்டை ஏற்படுத்தியது என்றும் ஹஸ்மட் குழு சம்பவ இடத்தைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு கட்டுப்பாட்டு இடுகையை அமைத்து, மீட்பு பணியை மேற்கொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடங்களுக்குள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், பிற்பகல் 1.22 மணிக்கு நடவடிக்கை முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.