காஜாங், தாமான் சௌஜானா இம்பியானில் உள்ள இரண்டு மாடி வீட்டின் முன் நேற்றிரவு 11.30 மணியளவில் டயப்பரை மட்டும் அணிந்திருந்த கைவிடப்பட்ட ஆண் குழந்தை இருப்பது குறித்து காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு புகார் அறிக்கை வந்தது. குழந்தையிடம் உடைகளோ குறிப்புகளோ எதுவும் இல்லை. காஜாங் காவல் நிலையத்தில் சம்பவத்தை புகாரளிப்பதற்கு முன்பு புகார்தாரர் முதலில் குழந்தையை கவனித்திருக்கிறார்.
ஆரம்ப சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை காயம் ஏதுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொப்புள் கொடியின் காயம் மற்றும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தை பிறந்து 2 வாரங்களுக்குள் இருக்கும் என நம்பப்படுகிறது. குழந்தையை ஜேகேஎம்மிடம் ஒப்படைப்பதற்கு முன்பு கண்காணிப்பு நோக்கங்களுக்காக குழந்தைகள் வார்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறது.
சம்பவத்தின் அடிப்படையில், குற்றவியல் சட்டத்தின் 317ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.
குழந்தை தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், அருகிலுள்ள எந்த நிலையத்தையும் தொடர்பு கொள்ளலாம் அல்லது வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முவாஸ் மஸ்லானை 017-9788804 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவலாம்.