கோம்பாக், நவம்பர் 19 :
கிளாந்தான் மற்றும் ஜோகூரில் இன்று வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நின்றபோது, இறந்ததாக மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன என்று காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.
இதில் கிளாந்தானின் கோத்தா பாருவில் ஒரு வழக்கும், ஜோகூரில் இரண்டு வழக்குகளும் பதிவாகியுள்ளன.
“மேலும், உலு சிலாங்கூரில் உள்ள உலு யாமில் உள்ள வாக்குச் சாவடியில் 27 வயது இளைஞன் ஒருவர் அங்கிருந்த வாக்குப்பெட்டியை தள்ளி விழுத்தியதாகவும், அவரை சோதனை செய்ததில் அவர் ஒரு மனநோயாளி எனவும் தெரியவந்ததாகவும் இன்று, கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
“இன்று நண்பகல் 12.45 மணி வரை கிட்டத்தட்ட 46 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் எனக்கு அறிவித்தது.
“நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், வாக்காளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக இன்று காலையில் வாக்குச்சாவடி மையங்களில் குவிந்ததால் சில வாக்குச்சாவடி மையங்களில் நெரிசல் ஏற்பட்டது.
“இருப்பினும், இன்று காலை 10.30 முதல் சில இடங்களில் நெரிசல் குறையத் தொடங்கியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும் காலையிலேயே பல வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றிவிட்டதால், இன்று மாலைக்குள் வாக்குச்சாவடி மையத்தில் நிலைமை சற்று அமைதியாக இருக்கும் என்று காவல்துறை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.