அலோர் ஸ்டார், நவம்பர் 21 :
நடந்து முடிந்த 15வது பொதுத் தேர்தலில் கெடா மாநிலத்தில் 13 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற பிறகு, பெரிக்காத்தான் நேஷனல் (PN) தனது இருப்பை வலுவாகக் காட்டியுள்ள போதிலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் மாநில சட்டமன்றத்தை கலைக்காது என்று கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹமட் சானுசி முஹமட் நோர் தெரிவித்தார்.
“நாங்கள் இப்போது மாநில சட்டமன்ற தேர்தலை நடத்த விரும்பவில்லை, ஏனெனில் நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே மார்ச் மாதத்திற்குப் பிறகு, மாநில சட்டமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம். இல்லையென்றாலும் கூட அடுத்த ஆண்டு ஜூலையில் அதுவாகவே கலைந்துவிடும்.
இவை தவிர, நான் கிளாந்தான் மற்றும் திரெங்கானுவுடன் முதலில் விவாதிக்க வேண்டும், மேலும் இம்மூன்று மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்த வேண்டும்,” என்று அவர் நேற்று இரவு நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“தேர்தல் ஆணையம் (EC) நேற்று அறிவித்தபடி, 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் 13-ஐ வென்ற பிறகு, PN-ன் வலுவான இருப்பினைத் தொடர்ந்து மாநில சட்டமன்றத்தை கலைப்பீர்களா” என்று கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.