ஆயிர் ஈத்தாம், நவம்பர் 28 :
பெக்கான், ஆயிர் ஈத்தாமிலுள்ள ஓரு வாகனம் பழுதுபார்ப்பு பட்டறை தீப்பிடித்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்தன.
இன்று திங்கள்கிழமை (நவம்பர் 28) காலை 11.36 மணியளவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு கார்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு வேன் ஆகியவை 4 முதல் 30 விழுக்காடு வரை எரிந்ததாக ஆயிர் ஈத்தாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி சுதர்மன் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.
“சம்பவம் தொடர்பில் எங்களுக்கு அவசர அழைப்பு வந்த பிறகு, ஏழு தீயணைப்பு வீரர்களும், FRT வாகனமும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன” என்று சுதர்மன் கூறினார்.
“இரண்டு குழாய்களைப் பயன்படுத்தி காலை 11.55 மணியளவில் நாங்கள் தீயை அணைத்தோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.