கோலாலம்பூர், நவம்பர் 29:
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு குற்றச்செயல் குறியீடு 19.3 விழுக்காடாக அதாவது 52,974 சம்பவங்களாகக் குறைந்துள்ளது என்று மலேசிய புள்ளிவிபரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றச்செயல் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 65,623ஆக உள்ளது.
அதில், கடந்தாண்டில் வன்முறை குற்றங்கள் 13.4 விழுக்காடு குறைந்து 11,495 சம்பவங்களாகவும், சொத்து தொடர்பான குற்றங்கள் 20.8 விழுக்காடு குறைந்து 41,479ஆகவும் பதிவாகியுள்ளது.
இக்குற்றச்சாட்டுக்களில் கொலை, கலவரம், கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களும் அடங்கும்.
”குற்றச்செயல்களின் எண்ணிக்கைக் குறைந்ததற்கு கோவிட்-19 காரணமாக விதிக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளால், சமூக நடவடிக்கைகளுக்கும், மாவட்டம் மற்றும் மாநிலம் கடந்து பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டதும் மிக முக்கிய பங்காற்றியுள்ளது.
அத்தோடு, அமலாக்கத்த தரப்பினரின் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளும், குற்றச்செயல் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பை அதிகரிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதும் குற்றச் செயல்கள் குறைந்ததற்கான காரணங்கள்,” என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் காவல்துறைக்கு கிடைத்த வர்த்தக குற்றச்செயல்களின் எண்ணிக்கை 15.3 விழுக்காடு அதிகரித்து 31,490 சம்பவங்களாக பதிவாகி உள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் 27,323 சம்பவங்களாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.