கோலாலம்பூர், நவம்பர் 30 :
டாமான்சாரா-ஷா ஆலாம் விரைவுச் சாலையை (DASH) பயன்படுத்தும் வாகனமோட்டிகளிடம் நாளை (டிசம்பர் 1) நள்ளிரவு 12.01 மணி முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று DASH தெரிவித்துள்ளது.
டெனாய் ஆலாம் டோல் பிளாசா, RRIM டோல் பிளாசா (குவாசா டாமான்சாரா) மற்றும் கோத்தா டாமான்சாரா டோல் பிளாசா ஆகிய மூன்று DASH எக்ஸ்பிரஸ்வே டோல் பிளாசாக்களில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
கார்களுக்கான கட்டணம் RM2.30 ஆகவும்; லோரிகள் (RM4.60); டிரெய்லர்கள் (RM6.90); வாடகைக் கார்கள் (RM1.20) மற்றும் பேருந்துகள் (RM2.30) என்ற அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று, அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முழுவதுமாக மின்னணு முறையில் இருக்கும்” என்றும், அதாவது Touch ‘N Go அட்டை , SmartTAG மற்றும் RFID ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி DASH விரைவுச்சாலை திறப்பு விழாவில், வாகன ஓட்டிகள் அக்டோபர் 14 முதல் இன்று (நவம்பர் 30) வரை 48 நாட்களுக்கு 20.1 கிமீ நெடுஞ்சாலையை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று முன்னர் அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.