தெமெர்லோ, டிசம்பர் 9 :
ஜாலான் ஃபெல்க்ரா கெர்டாவ்வில் உள்ள ஒரு டுரியான் பழத்தோட்டத்தில் உள்ள ஒரு கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு நபர் இறந்து கிடந்தார்.
அவருடைய சேமிப்பு பணம் மொத்தம் RM156,000-ஐ இணைய மோசடி கும்பல் ஒன்றில் சிக்கி ஏமாந்த அந்த ஆடவர், மன உழைச்சலில் தூக்கில் தொங்கியதாக நம்பப்படுவதாக, தெமெர்லோ மாவட்ட போலீஸ் தலைவர், துணை ஆணையர் முகமட் அசார் முகமட் யூசூப் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து நேற்று நண்பகல் 12.23 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரை, கூரியர் நிறுவனத்தின் பிரதிநிதிகளாகவும் போலீஸ் அதிகாரிகளாகவும் மாறுவேடமிட்டு, குறித்த மோசடிக் கும்பல் ஏமாற்றியதாக கண்டறியப்பட்டது.
“இதனால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பது புரிந்து கொள்ளப்பட்டு, சம்பவத்தைத் தொடர்ந்து, தண்டனைச் சட்டம் பிரிவு 420 மற்றும் திடீர் மரண விசாரணையின் கீழ் இரண்டு விசாரணைகளை போலீஸ் முன்னெடுத்துள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எந்த தரப்பினரிடமிருந்தும் ஆள்மாறாட்டம் செய்யும் அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் அவசரப்பட வேண்டாம் என்றும், மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.