கோத்தா பாரு, டிசம்பர் 11:
தற்போது கிளந்தனில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவக் குழுக்கள் அவ்வப்போது கண்காணித்து வருவதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே, நிவாரண மையங்களில் நிரந்தரமாக சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர் என்று அவர் மேலும் கூறினார்.
“தற்போது 1,000 பேருக்குக் குறைவானவர்களே நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டடுள்ளனர், அதனால் நாங்கள் நிரந்தரமான ஓர் குழுவை அங்கே நியமிக்கவில்லை, மாறாக நிவாரண மையங்களுக்கு வருகை தந்து, அவர்களை கண்காணிக்கும் மருத்துவக் குழுவை நியமித்துள்ளோம்.
“ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 15 பணியாளர்கள் உள்ளனர், அவர்கள் மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கு பொறுப்பானவர்கள்,” என்று அவர் கூறினார்.
டாக்டர் ஜைனியின் கூற்றுப்படி, தோல் நோய்கள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களைத் தவிர்ப்பதற்கு சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை, நிவாரண மைத்திலுள்ள மருத்துவக் குழு எடுக்கும். அத்தோடு கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் -19 க்கான பரி சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
மாநிலத்திலுள்ள மருத்துவமனைகள், தளவாடங்கள், மருந்து விநியோகம், பணியாளர்கள் பணியமர்த்தல் போன்ற அனைத்து சுகாதார வசதிகளுடன், கிளாந்தானில் வெள்ளத்தை சமாளிக்க தயார் நிலையில் உள்ளன என்று அவர் மேலும் கூறினார் .