ஜாலான் ஜெனியாங், குருனில் சந்தேக நபர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கெடா காவல் படைத் தலைமையகத்தின் தீவிர குற்றப் பிரிவு (D9), குற்றப் புலனாய்வுத் துறைக் குழு ஒன்று சுங்கை பட்டாணி மற்றும் ஜெனியாங், சிக் ஆகிய இடங்களைச் சுற்றி, ரோந்து சென்றபோது இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக, கெடா காவல்துறைத் தலைவர், டத்தோ வான் ஹாசன் வான் அகமட் கூறினார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் பதிவுகளை மறுஆய்வு செய்ததன் விளைவாக, 61 வயதான முதல் சந்தேக நபர், குற்றத் தடுப்புச் சட்டம் 1959 (POCA) இன் கீழ் தடுப்புக் காவலில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்டார் என்பதும் கண்டறியப்பட்டது, இரண்டாவது சந்தேக நபர் 48 வயதானவர் என்றும், இருவரும் உள்ளூர்காரர்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு 60க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகளும் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சம்பவதினத்தன்று போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டபோது, சந்தேகத்திற்கிடமான அடர் சாம்பல் நிற புரோட்டான் ஈஸ்வரா காரை அந்த இடத்தில் போலீஸ் குழு கண்டதாகவும், போலீசார் நிறுத்துமாறு உத்தரவிட்டபோது காரை ஓட்டுநர் நிறுத்த மறுத்துவிட்டார், இதனால் போலீசார் இடைமறித்து வாகனத்தை சோதனையிட்டதாகவும், அப்போது சந்தேக நபர்கள் போலீசாரை நோக்கி சுட்டனர், இதன் விளைவாக தற்காப்புக்காக போலீசார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி ஏற்பட்டது என்றும் கூறினார்.