வாரிசான் கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியதாக கூறப்படுவதில் எந்த உண்மையுமில்லை என்றும், உண்மையிலேயே தமது கட்சியின் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் கட்சியை விட்டு வெளியேறும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் வாரிசான் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஷாஃபி அப்டால் தெரிவித்துள்ளார்.
இந்த போலியான செய்தி, வாரிசான் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக மற்றும் கவிழ்க்கும் தீய நோக்கத்துடன் குறிப்பிட்ட சில தரப்பினால் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
” இன்று காலை கோத்தா கினாபாலுவில் வாரிசான் தனது உச்ச மன்றக் கூட்டத்தை நடத்தியது. இதில் வாரிசானின் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எமது கட்சி இன்னும் வலுவுடன் இருக்கிறது. இந்த நிலையில் வாரிசானிலிருந்து அதன் உறுப்பினர்கள் வெளியேற விரும்புவதாக கூறப்படுவது வேடிக்கையாக உள்ளது , இதில் எந்த உண்மையுமில்லை” என்று ஷாஃபி கூறினார்.
குறித்த உச்ச மன்றக் கூட்டத்தில், நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், அவரின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கும் தாமும் வாரிசான் கட்சியின் பிரதிநிதிகளும் ஏகமனதாக ஆதரவு வழங்கியதாகவும் அவர் கூறினார்.