இன்று செவ்வாய்க்கிழமை (டிச. 13) அதிகாலை போக்கோக் சேனாவின் தாமான் சேனா பெர்மாயில் உள்ள ஒரு வீட்டில் திரவமாக்கப்பட்ட (LPG) பெட்ரோலிய எரிவாயுக் கலன் வெடித்ததில் 26 வயது பெண் ஒருவர் காயமடைந்தார் என்று தாசேக் கெலுகோர் தீயணைப்பு நிலைய செயல்பாட்டு அதிகாரி, முகமட் ஹசம் ஹாசன் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்று காலை 8.13 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது என்றும் தங்கள் குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, பாதிக்கப்பட்டவர் அண்டை வீட்டாரால் பாதுகாப்பாக வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வெடிப்பு சம்பவத்தில், இரண்டு மாடி வீட்டின் பெரும்பாலான கட்டமைப்புகள் சேதமடைந்தன, அதே நேரத்தில் வீட்டிற்கு வெளியே இருந் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவையும் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரர் மற்றும் மைத்துனியுடன் அங்கு வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த பெண் சிகிச்சைக்காக கேப்பாலா பத்தாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், மேலும் எரிவாயுக் கலன் வெடிப்புக்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்று முகமட் ஹசாம் மேலும் கூறினார்.