அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நிர்வாகத்தால் சரவாக்கின் உரிமைகள் மறுக்கப்பட்டால் எந்த நேரத்திலும் ஐக்கிய அரசாங்கத்திற்கான தனது ஆதரவைத் திரும்பப் பெற கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) சுதந்திரமாக உள்ளது என்று ஜிபிஎஸ் தலைவர் அபாங் ஜொஹாரி ஓபங்கின் மூத்த உதவியாளர் தெரிவித்தார்.
ஃபஸ்ருதீன் அப்துல் ரஹ்மான், ஜிபிஎஸ் இன்னும் அதன் சொந்தக் கூட்டணி என்றும், அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் (PH) இன் பாகம் அல்ல என்றும் கூறினார். இந்த அரசாங்கம் PH கூட்டாட்சி அரசாங்கம் அல்ல. ஆனால் தேசத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் அதே நோக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் கட்சிகளின் தொகுப்பால் உருவாக்கப்பட்ட அரசாங்கம்.
எந்த நேரத்திலும், சரவாக்கின் உரிமைகள் சவாலுக்கு உட்படுத்தப்படும்போது அல்லது அந்தஸ்து கேள்விக்குள்ளாக்கப்படும்போது மற்றும் மாநிலத்திற்கு உரிய உரிமை வழங்கப்படாதபோது, ஜிபிஎஸ் ஒற்றுமை கூட்டாட்சி அரசாங்கத்திற்கான அதன் ஆதரவைத் திரும்பப் பெற முடியும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
GPS இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவைத் திரும்ப பெற்றால் தங்கள் இடங்களை இழக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவ்வாறு செய்வார்கள். இது கட்சித்தாவல் எதிர்ப்பு சட்டத்தை மீறுவதாக இருக்காது.
நேற்று, அரசியல் கூட்டணி மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர். PH தலைவராக அன்வார், அபாங் ஜொஹாரி, பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, கபுங்கன் ரக்யாத் சபா தலைவர் ஹாஜிஜி நூர் மற்றும் வாரிசான் தலைவர் ஷஃபி அப்டால் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டனர். அந்தந்த கட்சிகளின் பொதுச் செயலாளர்களும் கையெழுத்திட்டனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் GPS தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கவில்லை என்றும், அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், சரவாக் மற்றும் சபாவுக்கான மலேசியா ஒப்பந்தம் 1963 (MA63) தொடர்பான தீர்க்கப்படாத விஷயங்களை முன்னிலைப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் அவசியம் என்றும் ஃபஸ்ருடின் கூறினார்.