காவல் நிலையம் முன்பாகவே முன்னாள் மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய e-hailing3 ஓட்டுநர்: 3 நாட்கள் தடுப்புக்காவல்!

காஜாங்:

பண்டார் பாரு வாங்கி (Bandar Baru Bangi) காவல் நிலையத்திற்கு வெளியேயுள்ள பொது வாகன நிறுத்துமிடத்தில், தனது முன்னாள் மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இ-ஹெய்லிங் (e-hailing) ஓட்டுநருக்கு இன்று முதல் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த விசாரணைக்குத் துணை புரியும் வகையில், பண்டார் பாரு வாங்கி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை அடுத்து இந்த ரிமாண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காஜாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர், அசிஸ்டென்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

“சந்தேக நபருக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு ரிமாண்ட் அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்திற்கான உண்மையான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து போலீஸார் இன்னும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அவர் தனது சுருக்கமான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, காவல் நிலையத்திற்கு வெளியேயுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து அந்த நபர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சி ‘திரெட்ஸ்’ (Threads) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநரைப் போலீஸார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய நாஸ்ரோன், நேற்று முன்தினம் மதியம் 2.51 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து போலீசாருக்குப் புகார் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்தே சமூக வலைத்தளத்தில் வைரலான அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

தற்போது இச்சம்பவம் தொடர்பாக, வேண்டுமென்றே காயப்படுத்துதல் மற்றும் பயமுறுத்தும் நோக்கில் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றங்களுக்காகக் குற்றவியல் சட்டப் பிரிவு 323 மற்றும் 506-இன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here