இன்று கம்போங் மொராக், தும்பாட்டில் உள்ள வெள்ளத்தில் மூழ்கிய அவர்களது வீட்டில், மின்சாரம் தாக்கி மூன்று சகோதரிகள் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
மூன்று பெண்களும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் மிதந்து கிடக்க காணப்பட்டனர் என்று கிளாந்தான் காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
இன்று காலை 11.45 மணியளவில் குறித்த சம்பவம் நடந்ததாகவும், உயிரிழந்த மூவரும் 27 முதல் 33 வயதுடையவர்கள் என்றும் ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவர்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, வீட்டின் தூணைத் தொட்டதில் மின்சாரம் தாக்கி உடன்பிறந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மற்ற இரு சகோதரிகளுக்கும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் புசாட் அசுஹான் துனாஸ் இஸ்லாம் (Pasti)) மழலையர் பள்ளி ஆசிரியர் என்றும் அறிய முடிகிறது. மேலும் இவ்வழக்கில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை என்றும், இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது என்றும் ஜாக்கி ஹாருன் கூறினார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தும்பாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.