வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மோசடி கும்பலால் 488 மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட 488 பேரில் 359 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
331 பேர் மீண்டும் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், மேலும் 28 பேர் இன்னும் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் கம்போடியாவில் 227 பேர், லாவோஸில் 61 பேர், தாய்லாந்தில் 38 பேர் மற்றும் மியான்மரில் 33 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வேலைகளை வழங்கும் மோசடி கும்பல் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக இந்த விஷயத்தை தெரிவிக்குமாறு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள் அமைச்சகத்தை bkrm@kln.gov.my என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதற்கிடையில், தாய்லாந்து-மியான்மர் எல்லையில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 6 மலேசியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து மீட்பதில் போலீசாரின் விரைவான செயல்பாட்டிற்கு அமைச்சகம் தனது பாராட்டுகளைத் தெரிவித்தது.அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களை மீட்க மலேசிய அரசாங்கத்திற்கு உதவுவதில் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறித்து அமைச்சகம் பாராட்டு தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்கு உதவிய Teruntum சட்டமன்ற உறுப்பினர் Sim Chon Siang அவர்களுக்கும் அமைச்சகம் பாராட்டு தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.