கோலாலம்பூர்:
மெர்டேக்கா 118 கோபுரத்தின் உச்சியில் அனுமதியின்றி எறியதற்காக ஒரு ஜோடி தொடர்பில் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ள நிலையில், அந்தக் கட்டடத்தின் உரிமையாளரான PNB Merdeka Ventures Permodalan Nasional Sdn. Berhad (PMVSB), நிறுவனம் குறித்த விசாரணை அதிகாரிகளுக்கு அவர்களின் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
ஒரு தனியார் சொத்தாக இருக்கும் கட்டடத்தில் அல்லது இடத்தில், எந்தவொரு அத்துமீறல் செயல்களை செய்பவர்களும் சட்டத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும், ”என்று அந்த அறிக்கையில் PMVSB கூறியது.
மெர்டேக்கா 118 கோபுரத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக ஒரு ரஷ்ய ஜோடியை விசாரித்து வருவதாகவும், அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய இருவரும் அழைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 26 அன்று, சமூக வலைத்தளத்தில் குறித்த புகைப்படங்கள் வெளியாகின. அதில் உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமான மெர்டேக்கா 118 கோபுரத்தின் உச்சியில் ஒரு ஜோடி இருப்பதைக் காட்டுகிறது, இது தொடர்பில் சமூக ஊடகங்களிலும் பிற தளங்களிலும் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.