கோலாலம்பூர்:
நாட்டில் அதிகரித்து வரும் மோசடிகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் தொலைபேசிகளில் “Whoscall” செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மலேசிய காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மலேசிய காவல்துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், ஆணையர் டத்தோ ஸ்ரீ முகமட் கமாருடின் முகமட் டீன் கூறுகையில், குறித்த செயலி சந்தேகத்திற்குரிய மோசடி செய்பவர்களின் அழைப்புகளைப் பற்றி எச்சரிப்பதன் மூலம், தொலைபேசி மோசடி செய்பவர்களை இனங்கான ‘Whoscall’ செயலி பொதுமக்களுக்கு உதவும் என்றார்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்ட தொலைபேசிகளை அணுகும் மோசடிகாரர்களின் தொலைபேசி எண்களை பிளாக்லிஸ்ட் செய்வதற்கும், மோசடி செய்பவர்களிடமிருந்து வரும் அழைப்புகளின் சாத்தியக்கூறுகள் குறித்து தொலைபேசிப் பயனர்களை எச்சரிப்பதற்கும் குறித்த செயலி டெவலப்பர் காவல்துறையுடன் ஒத்துழைத்து வருகிறது.
தொலைபேசிக்கு வரும் ஒரு அழைப்பைப் பெறுபவர், அந்த அழைப்பை எடுக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க உதவும்.
“Whoscall செயலியில் போலீசார் தொகுத்த மோசடி செய்பவர்களின் ஃபோன் எண்களின் தரவுத்தளம் உள்ளது. எனவே அந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம், ஒரு தொலைபேசிப் பயனரின் திரையில் அது ஒரு எச்சரிக்கையை ஒளிரச் செய்வதன் மூலம் சாத்தியமான மோசடி அழைப்பு குறித்து எச்சரிக்கப்படும் என்றும் இந்த செயலி இலவசம் மற்றும் பாதுகாப்பானது,” என்று, நேற்று சேரஸில் நடந்த செயலி வெளியீட்டு விழாவில் அவர் கூறினார்.
மேலும் இந்தச் செயலியின் பயன்பாடு வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (CCID) தரவுத்தளத்தை மேம்படுத்தும் என்பதால், அவர்கள் பெறும் அழைப்புகளிலிருந்து மோசடி செய்பவர்களின் தொலைபேசி எண்களை போலீசாருக்குத் தொடர்ந்து வழங்குமாறு முகமட் கமாருடின் பொதுமக்களை வலியுறுத்தினார்.