ஜார்ஜ் டவுன்:
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் ஒரு ஆணும் பெண்ணும், இன்று ஜார்ஜ் டவுன் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
மாவட்ட நீதிமன்ற நீதிபதி நூர் மெலாத்தி டயானா அப்துல் வஹாப் முன்நிலையில், முஹமட் சியாகிர் சைபுல் அசார், 35, மற்றும் முலியானா சுசாந்தி பஹ்மி, 31, ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி, அதிகாலை 1 மணியளவில் பாங்காசபுரி ரியா, ஜாலான் லெம்பா பெர்மாய், தஞ்சோங் பூங்கா என்ற இடத்தில் போதைப்பொருள் கடத்தியதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், டிசம்பர் 29 அன்று நண்பகல் 12.50 மணியளவில், கெலுகோரின் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் உள்ள கார் விற்பனை மையத்தின் பின் பாதையில் 1,480 கிராம் எடையுள்ள ஹெரோயின் விற்றதாகவும் முஹமட் சியாகிர் மீது மற்றுமொரு குற்றமும் சாட்டப்பட்டது.
ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன, இது பிரிவு 39B(2) இன் கீழ் தண்டனைக்குரியது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை விதிக்க வழி செய்யும்.
வழக்கில் வேதியியல் அறிக்கையை சமர்ப்பிக்க, வரும் ஏப்ரல் 5 ஆம் தேதியை நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.
துணை அரசு வக்கீல் நூருல் அத்திகா அஷரப் அலி இந்த வழக்கை தொடர்ந்தார், அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.