மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட MV Dai Cat 06 என்ற சரக்குக் கப்பல், ஐந்து பணியாளர்களுடன் உலோகக் குழாய்களை ஏற்றிச் சென்றது, நேற்று இந்தோனேசிய கடற்பரப்பில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
குறித்த கப்பல் காணாமல்போனது தொடர்பில், லங்காவி தேடல் மற்றும் மீட்பு மையத்திலிருந்து ஜோகூர் பாரு கடல்சார் மீட்பு துணை மையம் மூலம், நேற்று மாலை 5.13 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக, ஜோகூர் மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவு இயக்குனர், முதல் அட்மிரல் நூருல் ஹிசாம் ஜகாரியா கூறினார்.
நேற்று நண்பகல் 12.22 மணியளவில் கப்பலின் முகவரால் போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
20 முதல் 57 வயதுடைய மூன்று மலேசியர்கள் மற்றும் இரண்டு இந்தோனேசிய மாலுமிகளுடன், கடந்த டிசம்பர் 23 அன்று பேராக்கின் கம்போங் ஆச்சேயில் உள்ளபடகுத்துறையிலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த சரக்கு கப்பல், டிச. 31 அன்று சரவாக்கின் கூச்சிங்கிற்கு சென்றடைய திட்டமிடப்பட்டதாக நூருல் ஹிசாம் கூறினார்.
“கப்பல் காணாமல்போனதாக நம்பப்படும் கடைசி இடம், ஜனவரி 1 அன்று தானியங்கி அடையாள அமைப்பு (AIS) மூலம் கண்டறியப்பட்டது என்றும், அது இறுதியாக ஜோகூர் கடல் எல்லையில் இருந்து 0.2 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தோனேசிய கடல் பகுதியில் இருந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, குறித்த சரக்குக் கப்பலில் 527 குழாய்கள் இருந்தன, அவற்றின் மதிப்பு RM726,205 என்பது குறிப்பிடத்தக்கது.