சுபாங் டோல் பிளாசா, நியூ கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில் (NKVE) நேற்று நள்ளிரவு பணம் செலுத்துவதற்காக நின்றுகொண்டிருந்த ஒரு லோரி மீது, அவர் ஓட்டி வந்த லோரி மோதியதில் இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் உயிரிழந்தார் என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறையின் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில், நேற்று நள்ளிரவு 12.37 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
“31 வயது இந்திய ஆடவர் ஓட்டிச் சென்ற லோரி, சுங்க கட்டணம் செலுத்த முன் நின்ற லோரியின் பின்புறத்தில் மோதியதாகவும், பாதிக்கப்பட்டவர் ஓட்டுநர் இருக்கையில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது” என்று முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41-ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
“சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள், போக்குவரத்து புலனாய்வு அதிகாரி, இன்ஸ்பெக்டர் முகமட் ஹபீஸ் பைசல் ஏ அஜீஸை 011-32311232 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.