தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவரால் மக்காவ் மோசடியில் சிக்கிய 66 வாயதான ஒரு பெண்மணி RM140,000 இழந்துள்ளதாக மாஞ்சாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் நூர் உமர் சாஃபி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண், தனது தாபுங் ஹாஜி சேமிப்பு கணக்கிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் மோசடி செய்பவரின் வங்கிக் கணக்கிற்கு குறித்த தொகை பணத்தை மாற்றியதாக, அவர் நேற்று அளித்த போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.
தன்னை ரோஹானி என அடையாளப்படுத்திக் கொண்ட மோசடிப்பேர்வழி, குறித்த பெண்மணி பணமோசடியில் ஈடுபட்டதாகவும், விரைவில் போலீசாரால் கைது செய்யப்படுவார் என்றும் கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
கடந்த ஆண்டு மாஞ்சாங் மாவட்டத்தில் மொத்தம் RM2.4 மில்லியன் இழப்புடன் கூடிய மக்காவ் ஊழல் தொடர்பான 87 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
மோசடி செய்பவர்கள், அமலாக்க அமைப்புகள், காவல்துறை, உள்நாட்டு வருவாய்த் துறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நீதிமன்றம், நிதி நிறுவனங்கள் அல்லது சேவை நிறுவனங்களில் இருந்து அழைப்பது போல நடித்து பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.