இம்முறை நடைபெறும் தைப்பூசக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சுமார் இருபது இலட்சம் இந்து பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் பத்துமலைத் திருத்தலத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜைனல் முகமட் முகமட் கூறுகையில், பத்துமலையை சுற்றி இன்று (பிப்ரவரி 2) முதல் பிப்ரவரி 6 வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
நாளை இரவு 10 மணியளவில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் வெள்ளி ரத யாத்திர, சனிக்கிழமை மாலை சுமார் 4 மணிக்கு பத்துமலை திருத்தலத்தை வந்தடையும் என்றும் கூறினார்.
மேலும் மலேசிய போலீஸ் படையுடன் 11 நிறுவனங்களும் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.