செபெராங் ஜெயாவில் உள்ள Tuna அடுக்குமாடிக் குடியிருப்பின் D4 விலுள்ள வாகன தரிப்பிடப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 15 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு அதிகாரி, ஷாருல் முனாவர் தாஹரேன் தெரிவித்தார்.
தீ விபத்து குறித்து அதிகாலை 5.11 மணியளவில் தமக்கு அழைப்பு வந்ததாகவும், Perai தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழு உடனே சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.
அங்கு வந்த தீயணைப்புக் குழுவினர், வாகன நிறுத்துமிடத்தில் 15 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்டறிந்ததாகவும், வாகன தரிப்பிடத்திற்கு அருகிலிருந்த தொழுகைப் பொருட்களை வைக்கப் பயன்படுத்தப்பட்ட கடையும் தீ விபத்தில் சேதமடைந்தது என்றார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.