அம்பாங்: ஜாலான் உகே பெர்டானாவில் வாய்க்காலில் விளையாடி நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டாவது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை (பிப்ரவரி 13) மாலை சுமார் 5.10 மணியளவில் எட்டு வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.
ஒரு வாய்க்காலில் குப்பைக் குவியல்களுக்கு மத்தியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. திங்கட்கிழமை தொடர்பு கொண்டபோது, ”நாங்கள் உடலை வெளியே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை (பிப். 11) ஜாலான் உகே பெர்டானாவில் உள்ள வாய்க்காலில் விளையாடிய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சனிக்கிழமை மாலை 5.08 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கியது.
நீரில் மூழ்கிய இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் மாலை 6.30 மணியளவில் முதல் உடல், 10 வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு சிறுவர்களும் வாய்க்காலில் விளையாடிக் கொண்டிருந்தனர், மழையின் போது அவர்கள் தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.