வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு உரிய நேரத்தில் உதவி சென்றடைவதை உறுதி செய்வதற்காகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் “wang ihsan” (பண உதவி) விநியோகிக்கப்படுவதையும், சிலருக்கு இதுவரை பண உதவி கிடைக்காதது தொடர்பிலும் அரசாங்கம் கண்காணிப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண மையங்களில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்பு, குறித்த பண உதவியை பெற வேண்டும் என்பது எங்கள் வாக்குறுதி என்று, இன்று வியாழன் (பிப்ரவரி 16) நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி பதில் அமர்வின்போது தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு தலைவருமான ஜாஹிட் ஹமிடி கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்புவதற்கு முன்பதாக உதவிகளைப் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு வெள்ள நிவாரண உதவி நிதி வழங்கும் ஒருங்கிணைப்பு தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“வெள்ள நிவாரண உதவி நிதி குறித்து நான் கண்காணிப்பேன். ஏனெனில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் வீடுகளுக்குத் திரும்புவதற்கு முன்பதாகவே அதைப் பெற வேண்டும் என்பது எங்கள் வாக்குறுதி. மாவட்ட அளவிலான பேரிடர் குழுவுடன் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒதுக்கீடு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நான் அவற்றை கண்காணிப்பேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கிளாந்தான் மற்றும் திரெங்கானுவிற்கு தலா 68 மில்லியன் ரிங்கிட் உதவி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.









