RM5.4 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் மூன்று சகோதரர்கள் கைது

பயன்படுத்திய தளபாடங்கள் ஏற்றப்பட்ட ஒரு லோரியில், மறைத்து வைத்திருந்த RM5.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 150 கிலோகிராம் சியாபு வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 24 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோலாக் கிராயின் கம்போங் தெங்கா மற்றும் கம்போங் கெனோர் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் வைத்து அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்று, கிளாந்தான் காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.

கிளாந்தான் எல்லையில் இருந்து குறித்த போதைப்பொருட்களை கிள்ளான் பள்ளத்தாக்குக்கு கொண்டு செல்வதற்காக சென்ற போது, ​​அனைத்து சந்தேக நபர்களும் காலை 7.50 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், போதைப்பொருளை ஏற்றிச் செல்ல சகோதரர்கள் பயன்படுத்திய லோரி அவர்களது குடும்பத்துடையது என்றும், சம்பந்தப்பட்ட மூன்று சகோதரர்களும் ‘போக்குவரத்து சேவை வழங்குநர்களாக’ செயல்பட்டதாகவும் அறியமுடிகிறது.

இவ்வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களில் இருவருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. அத்தோடு அவர்களிடமிருந்து RM16,000 க்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு கார் மற்றும் லோரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here