வரவு செலவுத் திட்டம் 2023: EPF-ன் முதல் கணக்கில் RM10,000 க்கும் குறைவான சேமிப்பு உள்ளவர்களுக்கு RM500 அரசு பங்களிப்பு செய்யும்

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், ஊழியர் சேமிப்பு வைப்பு நிதியில் (EPF) பங்களிப்பாளர்களின் முதல் கணக்கில் RM10,000-க்கும் குறைவாக சேமிப்பை வைத்திருக்கும் பங்களிப்பாளர்களுக்கு, RM500 அரசாங்கம் பங்களிக்கும்.

இந்த RM500 அரச பங்களிப்பின் கீழ், 40 முதல் 54 வயதுக்குட்பட்ட EPF பங்களிப்பாளர்கள் பயனடைவார்கள் என்றும், இதற்காக கிட்டத்தட்ட RM1பில்லியன் ஒதுக்கீட்டை அரசு ஒதுக்கியுள்ளதாகவும், இது 20 இலட்சம் EPF உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று வெள்ளிக்கிழமை (பிப். 24) நாடாளமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது, இதனைக் கூறினார்.

“நாடு கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிறகு, மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை சமாளிக்க பல முறை ஓய்வூதிய சேமிப்புகளை மீள் எடுத்தனர். இப்போது அவர்கள் மெது மெதுவாக தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

“எனவே மக்களின் ஓய்வூதிய சேமிப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் பொருட்டு அரசாங்கம் இந்த திட்டத்தை வகுத்துள்ளதாகவும், இது அவர்களின் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பு செய்ய போதுமானதாக இருக்கும்,” என்று நம்புவதாக பிரதமர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here