நேற்று இரவு 9 மணி நிலவரப்படி, ஆறு மாநிலங்களை சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மலாக்காவில், 16 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (SDMC) செயலகம் தெரிவித்துள்ளது.
பகாங்கில், ரோம்பின், ஜெரான்டுட், பெக்கான் மற்றும் மாரான் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 293 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சபாவில், வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 164 பேராக குறைந்துள்ளது.
அதே நேரத்தில், நெகிரி செம்பிலானில், இரவு 9 மணி நிலவரப்படி ஆறு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அதில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 145 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில APM இயக்குனர் லெப்டினன்ட் கேணல் முஹமட் நஸ்ரி மெஸ் காம் கூறினார்.
ஜோகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 4 மணிக்கு 7,981 ஆக இருந்து இரவு 8 மணி நிலவரப்படி 9,162 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், சரவாக்கில், கூச்சிங், பாவ் மற்றும் சிபுரான் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேராக உள்ளதாக கூறப்படுகிறது.