ஜோகூர் வெள்ளத்தில் சிக்கி நான்காவது நபர் பலி

ஜோகூரில் நேற்று நண்பகல் பத்து அனாமில் உள்ள வாய்க்காலில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜோகூர் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை நான்காக பதிவாகியுள்ளது என்று, ஜோகூர் காவல்துறைத் தலைவர், டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறினார்.

மரணமடைந்த 68 வயதான மூதாட்டி, ஜெமாஸ் பாருவில் உள்ள தாஹ் காங் தேசிய சீனப் பள்ளியின் தற்காலிக வெளியேற்ற மையத்தில் தங்கியிருந்த பின்னர் காணாமல் போனார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறித்த மூதாட்டி பத்து ஆனாமில் தனியாக வசித்து வந்தவர் என்றும், வெள்ளத்தில் மூழ்கிய அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வாய்க்காலில் அவரது அண்டை வீட்டாரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் ஏன் துயர்துடைப்பு மையத்தை விட்டு வெளியேறினார் என்பது தொடர்பில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிகாமாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது” என்றும் அவர் நேற்று இரவு சிகாமாட் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதுவரை ஜோகூரில் மொத்தம் நான்குபேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அதில் குளுவாங்கில் ஒருவரும், சிகாமாட்டில் மூன்று பேரும் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here