மூன்று மாநிலங்களில் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 53,040 பேராக குறைந்துள்ளது

வெள்ளம் பாதித்த ஜோகூர், பகாங் மற்றும் மலாக்கா ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளம் காரணமாக குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 55,000 ஆக இருந்து, இன்று (மார்ச் 6) காலை 53,040 ஆக குறைந்துள்ளது.

ஜோகூரில், இன்று திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் உள்ள 269 நிவாரண மையங்களில் 14,125 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 49,410 பேர் தங்கியுள்ளனர். இது நேற்று (மார்ச் 5) இரவு 8 மணிக்கு 50,596 ஆக இருந்து இன்று காலை குறைவடைந்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பகாங்கில், சமூக நலத் துறை InfoBencana செயலியின் தரவுகளின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை இரவு நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 3,014 பேருடன் ஒப்பிடும்போது, தற்போது அங்குள்ள 21 நிவாரண மையங்களில் 3,029 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரிப்பைக் காட்டுகிறது.

மலாக்காவில், இன்று திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 148 குடும்பங்களைச் சேர்ந்த 601 பேர் அங்குள்ள ஆறு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இந்த எண்ணிக்கை நேற்றிரவு 8 மணிக்கு 147 குடும்பங்களைச் சேர்ந்த 595 பேராக இருந்தது என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here