இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு மலேசிய நிறுவனம் தொடர்பில் எந்த விவரங்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
“அந்த நிறுவனம் J&E (J&E Advance Tech Sdn Bhd) என்றும், அந்த நிறுவனத்தின் தலைவர் யார், பங்குதாரர் யார் அல்லது அதில் யார் யார் இருக்கிறார்கள் என்பதைச் சரிபார்த்து பாருங்கள். இதில் நான் எதையும் மறைக்கவில்லை. நான் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன்” என்று, இன்று புதன்கிழமை (மார்ச் 8) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2023 பற்றிய தனது இறுதி உரையின் போது முகமட் சாபு தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு முட்டைகளை இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனத்தின் பெயரை அரசாங்கம் மறைக்கிறதா என்று டத்தோ வான் சைபுல் வான் ஜானின் (PN-Tasek Gelugor) துணைக் கேள்விக்கு முகமட் சாபு இவ்வாறு பதிலளித்தார்.
நாட்டில் கடுமையான முட்டை பற்றாக்குறை நிலவியத்தைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக குறித்த நிறுவனத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதற்காக அரசாங்கம் பகிரங்கமான குத்தகையை அறிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.









