ஜோகூர், பகாங் மற்றும் மலாக்கா ஆகிய மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, இன்று பிற்பகலில் 45,302 ஆக இருந்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி 43,198 ஆக குறைந்துள்ளது.
ஜோகூரில், இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி 44,779 ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று இரவு 8 மணி நிலவரப்படி 42,770 ஆக குறைந்துள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜோகூரின் நான்கு மாவட்டங்களில் மொத்தம் 154 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் செயற்பட்டு வருகின்றன. அங்கு பத்து பகாட் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, 11,182 குடும்பங்களை சேர்ந்த 39,800 பேர் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பகாங்கில், ரோம்பினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் 170 ஆக இருந்து, இன்று இரவு 8 மணி நிலவரப்படி 169 ஆக குறைந்துள்ளது. அங்கு இரண்டு நிவாரண மையங்கள் செயற்பாட்டிலுள்ள என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.
மலாக்காவில், ஜாசினில் இன்று இரவு 8 மணி நிலவரப்படி 61 குடும்பங்களைச் சேர்ந்த 259 பேர் இன்னமும் அங்குள்ள 5 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், இது பிற்பகல் 2 மணிக்கு 90 குடும்பங்களைச் சேர்ந்த 353 பேராக இருந்தது என்று பேரிடர் மேலாண்மை குழு கூறியுள்ளது.










