ஜோகூர் மேம்பாலத்தில் உள்ள பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் சுங்கச்சாவடி நிலையத்தையும் இரண்டாம் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுல்தான் அபு பக்கர் சுங்கச்சாவடி நிலையத்தையும் மேம்படுத்த அரசாங்கம் RM741 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசூஃப் தலைமை தாங்கிய கூட்டத்தில் அம்முடிவு தெரிவிக்கப்பட்டதாக ஜோகூரின் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்புச் செயற்குழுத் தலைவர் முகமது ஃபாஸ்லி முகமட் சாலே நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
ஒதுக்கப்பட்ட தொகையில் RM96.2 மில்லியன் இவ்வாண்டு செலவிடப்படும் என்றும், அதில் சுமார் மூன்றில் ஒரு பங்கு மோட்டார்சைக்கிள்களுக்கான எம்-பைக் தடங்களை மேம்படுத்த செலவிடப்படும் என்று முகமட் ஃபாஸ்லி கூறினார்.
இதுதவிர இரண்டு சுங்கச்சாவடிகளிலும் நுழைவில் 25 மோட்டார்சைக்கிள் தடங்களும் வெளியேறும் வழியில் 25 தடங்களும் அமைக்கப்படும். அந்தச் சாவடிகளில் தற்போது 100 எம்-பைக் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜோகூருக்குள் நுழைவதற்கும் அதிலிருந்து வெளியேறுவதற்கும் 150 மோட்டார் சைக்கிள் தடங்கள் இயங்கும்போது, போக்கு வரத்து நெரிசல் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தரைவழிப் பாதைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க செயற்குழு 23 பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக துணைப் பிரதமர் ஃபாடில்லா கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.