வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு தளர்வுத் திட்டம் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஒதுக்கீடு விண்ணப்பம் மற்றும் அனுமதியை மனிதவள அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்க ஒதுக்கீடு பெற்ற முதலாளிகள், அவர்களை உடனடியாக உள்வாங்குவதற்கான திட்டங்களைத் தொடங்குவதற்கு, இந்த தற்காலிக முடக்கம் உதவும் என்று அமைச்சர் வி.சிவகுமார் கூறினார்.
“வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கான அனுமதியைப் பெற்றுள்ள அனைத்து முதலாளிகளும் இந்த நேரத்தில் தங்கள் புதிய தொழிலாளர்களை பணியமர்த்தும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
“மேலும், அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது.”
மார்ச் 14 ஆம் தேதி நிலவரப்படி, கட்டுமானத் துறையில் 342,106, சேவைகளில் 143,568, உற்பத்தியில் 387,122, தோட்டத் துறையில் 76,325, சுரங்கங்கள் துறையில் 376 மற்றும் விவசாயத்தில் 45,899 என மொத்தம் 995,396 ஒதுக்கீடுகளுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அத்தோடு புதிதாக வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பம் மற்றும் ஒப்புதலுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.