தாமான் சௌஜானா, KLIA இல் காரில் சிக்கிக்கொண்ட ஐந்து மாத பெண் குழந்தை சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் பாதுகாப்பாக இன்று மீட்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை (மார்ச் 20) நண்பகல் 1.23 மணியளவில், இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், KLIA தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 6 தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு உடனே விரைந்ததாகவும் அதன் இயக்குனர் மோர்னி மாமட் கூறினார்.
“குறித்த குழந்தையின் தாய் வாகனத்தில் இருந்து இறங்கிய பிறகு, அவரின் புரோத்தோன் சாகா கார் தானாகவே பூட்டிக்கொண்டதாகவும், குழந்தை சுமார் 30 நிமிடங்களுக்கு காருக்குள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரின் கதவைத் திறந்து, குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.









