வெளிநாட்டு பதிவு எண்கள் கொண்ட வாகனங்களுக்கு மானிய விலைப் பெட்ரோலை விற்றதற்காக, ஜோகூரிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலைய நடத்துனருக்கு ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றம் இன்று RM40,000 அபராதம் விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட, 59 வயதான ஃபான் சிப் சான், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு RON95 பெட்ரோல் நிரப்ப அனுமதித்ததாக, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
அமர்வு நீதிமன்ற நீதிபதி டத்தோ சே வான் ஜைதி சே வான் இப்ராஹிம் முன்நிலையில் மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, ஃபான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றப்பத்திரிகையின்படி, வெளிநாட்டு பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் RON95 பெட்ரோலை நிரப்ப அனுமதிக்க கூடாது என்ற அறிவுறுத்தல்களுக்கு இணங்க குற்றம் சாட்டப்பட்டவர் தவறிவிட்டார். அதாவது வழக்கின் உண்மைகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் RM113 மதிப்புள்ள 54 லிட்டர் பெட்ரோலை நிரப்ப அனுமதித்தார் எனக் கூறப்படுகிறது.
இது குற்றம் சாட்டப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருக்கு முதல் குற்றம் என்பதைக் கருத்தில் கொண்டு RM40,000 அபராதம் விதிக்கப்பட்டது, அபராதம் செலுத்த தவறினால் அவர் ஐந்து மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனை அவருக்கும் மற்ற தொழில்துறையினருக்கும் ஒரு பாடமாக அமையும் என்று கூறி நீதிபதி இவ்வழக்கில் தீர்ப்பளித்தார்.